10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் பள்ளி கல்வித் துறை பரிந்துரைப்படி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் மூலம் தருவிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு தேவையான புத்தகங்கள், மாவட்டந்தோறும் உள்ள பாட நுால் கழகத்தின் மூலம், பள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இதில், 10ம் வகுப்பு பாட புத்தகத்தின் விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அது போல, மேல்நிலை வகுப்புக்கான பாட புத்தகங்களின் விலை, கடந்த ஆண்டை விட, 80 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 - 15ம் ஆண்டில், 10ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் புத்தகம் தலா, 85 ரூபாய்க்கு விற்கப்பட்டன.
நடப்பாண்டில், தமிழ் புத்தகம் - 110 ரூபாய்; ஆங்கிலம் - 90 ரூபாய்; கணிதம் - 160 ரூபாய்; அறிவியல் - 170 ரூபாய், சமூக அறிவியல் - 130 ரூபாயாகவும், ஒரு செட், 660 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன; இது, கடந்த ஆண்டை விட, 235 ரூபாய் கூடுதல்.அதே போல, மேல்நிலை வகுப்புகளுக்கான தமிழ் புத்தகம், 25 ரூபாயிலிருந்து, 40 ரூபாயாகவும்; ஆங்கில புத்தகம், 28 ரூபாயிலிருந்து, 60 ரூபாயாகவும்; மற்ற புத்தகங்கள் அனைத்தும், 60 முதல், 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம் தேவைக்கு ஏற்ப கிடைக்கின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாறும் போது, புத்தகத்தின் விலை உயரும். கடந்த ஆண்டு பாடத்திட்டம் மாறாததால், புத்தகத்தின் விலை உயரவில்லை.
நடப்பாண்டு, ஜனவரி மாதம் புத்தகத்தின் விலையை உயர்த்தி, அரசாணை வெளியிட்டு, தனி யார் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, தேவைக்கு ஏற்ப புத்தகம் வினியோகம் செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்