பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த
மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது
என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 7ம் தேதி பிளஸ் 2, 22ம்
தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 2 விடைத்தாள்
நகல்களை பெறவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு அடுத்த மாதம்
22ம் தேதி சிறப்பு உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஜூலை மாதம் 16ம் தேதி
சிறப்பு உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது.
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவதற்காக அனைத்து
சிஇஓக்களுக்கும் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு வரவழைத்து, சிறப்பு பயிற்சி
கொடுக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து மாவட்டகளிலும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் சிறப்பு
வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.