ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான மத்திய அரசுப்
பணியாளர்தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) முதன்மைத் தேர்வு முடிவுகள்
ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. மத்திய அரசுப் ப
ணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்தத் தேர்வை 16,933 பேர் எழுதினர். இவர்களிலிருந்து 3,200 பேர் நேர்முகத்
தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்திலிருந்து தேர்வு எழுதிய 904 பேரில் 240-க்கும் மேற்பட்டோர்
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும்
தெரிவித்தன. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கும்
என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான
முழுமையான விவரங்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
நேர்முகத் தேர்வுக்கான முதல் கட்ட அழைப்புக் கடிதங்கள் அதே இணையதளத்தில்
ஏப்ரல் 18-க்குள் வெளியிடப்படும். அதன்பிறகு, இரண்டாவது, மூன்றாவது
கட்டஅழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்குத் தகுதி
பெறாத தேர்வர்களின் மதிப்பெண் விவரங்கள் இறுதி முடிவுகள்
அறிவிக்கப்படும்போது வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாட் இட
ஒதுக்கீடு: ஜாட் சமூகத்துக்கான இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக மறுஆய்வு மனுவை
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான இறுதி முடிவுக்குப் பிறகே முதன்மை தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பிரதான தேர்வு
முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டன. ஜாட் சமூகத்தினரை மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்த முந்தைய ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசின் முடிவை மார்ச் மாதம் 17-ஆம் தேதி உச்ச நீதிமன்றம்
ரத்துசெய்தது. இதையடுத்து, இதுதொடர்பான மறு ஆய்வு மனுவை மத்திய அரசு உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.