அரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு

சென்னை:'ஆசிரியர் சங்கங்களுடன், அரசு பேச்சு நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது.


தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை உருவாக்கி உள்ளன. இக்குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மார்ச் 8ம் தேதி, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடந்தது. இரண்டாம் கட்டமாக நேற்று, 32 மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டங்கள் நடந்தன. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சென்னை, சேப்பாக்கத்தில், ஆசிரியர்கள் லிங்கேசன், சத்தியநாதன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்க மாநில தலைவர், சங்கரபெருமாள் பேசுகையில், ''ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து, ஜாக்டோ குழுவுடன், அரசு பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.

கோரிக்கைகள் என்ன?

*ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தர வேண்டும்
*ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை, மத்திய அரசின் ஊதியம் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.
*பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.
*ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் நியமித்த ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.