வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும்
சிறப்பு முகாம், மாவட்டம் முழுவதும் உள்ள, 2,243 ஓட்டுச்சாவடிகளிலும்,
இன்று நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், மொபைல் எண் மற்றும்
இ-மெயில் முகவரி பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. திருப்பூர்
மாவட்டத்தில், இதுவரை, 2.05 லட்சம் வாக்காளர்கள், இவ்விவரங்களை பதிவு
செய்துள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில்,
விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கடந்த 12ல் முதல்கட்ட
முகாம் நடந்தது; இரண்டாம் கட்ட முகாம், மாவட்டம் முழுவதும் இன்று
நடைபெறுகிறது.
ஒவ்வொரு வாக்காளரும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல் எடுத்துச்
செல்ல வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள், ஆதார் பதிவின்போது வழங்கிய,
"என்ட்ரோல்மென்ட்' எண்ணுடன் கூடிய "சிலிப்' நகல் வழங்கலாம். இதுவரை ஆதார்
பதிவு செய்யாதவர்களும், "சிலிப்' இல்லாதவர்களும், மொபைல் எண், இ-மெயில்
முகவரியை மட்டும் பதிவு செய்யலாம்.
பொதுமக்கள் கூறுகையில், "சிறப்பு முகாம் மற்றும் தாலுகா அலுவலகங்களில்,
ஆதார் எண் இணைப்புக்கான படிவம் கிடைப்பதில்லை. அதிகாரிகளை கேட்டால்,
"படிவம் இல்லை; நகல் எடுத்து, பூர்த்தி செய்து கொடுங்கள்,' என்கின்றனர்.
பள்ளிகளில் படிவத்தை பெற்றுக்கொண்டு, ஜெராக்ஸ் கடையை தேடிச் செல்ல
வேண்டியுள்ளது. இதனால், மக்களுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன், ஐந்து முதல், 10
ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இது, சலிப்பை தருகிறது,' என்றனர்.
தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கேட்டபோது, "ஒவ்வொரு தொகுதிக்கும், 10 ஆயிரம்
படிவங்களே வழங்கப்பட்டுள்ளன. படிவம் இல்லையெனில், ஆதார் அட்டை மற்றும்
வாக்காளர் அடையாள அட்டை நகல்களில், மொபைல் எண் மற்றும் இ-மெயில் விவரம்
எழுதிக்கொடுத்தால் போதும். படிவம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆதார் அட்டை இல்லாதவர் கள், போட்டோவுடன் கூடிய ஆதார் "சிலிப்' நகல்
கொடுக்கலாம். ஆதார் "சிலிப்' இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகலில்,
மொபைல் எண் மற்றும் இ-மெயில் விவரங்களை எழுதிக்கொடுத்தால் போதும்,'
என்றனர்.