தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா

ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. 
 
           பங்கேற்க விரும்புவோரிடம் கோடை விடுமுறை துவங்கும் முன் ஏப்ரலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கு முன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.கடந்தாண்டு சரியான திட்டமிடல் இன்றி பள்ளிகள் திறந்த பிறகும் கலந்தாய்வு தொடர்ந்தது. இதனால் குடும்பம், குழந்தைகளின் கல்வி ரீதியாக முடிவு எடுப்பதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர்.இந்தாண்டும் ஆசிரியர்களிடம் இதுவரை விருப்ப மனுக்கள் பெறப்படவில்லை. கோடை விடுமுறை துவங்கி விட்டதால் பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் நிலையுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.பொது மாறுதல் கலந்தாய்வை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தால் அந்த கல்வியாண்டில் ஆசிரியர்கள் திட்டமிட வசதியாக இருக்கும். கோடை விடுமுறைக்குள் இரு கலந்தாய்வுகளையும் நடத்தி முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

முன்கூட்டியே பட்டியல்: பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப்
படையாக நடத்த கலந்தாய்விற்கு முன்பே பள்ளிகளில் காலி பணியிடங்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஆசிரியர்கள் ஆண்டுதோறும் வலியுறுத்துகின்றனர்.
அரசியல், அதிகாரிகள் சிபாரிசுபடி இடங்கள் மறைக்கப்படுவதாக சர்ச்சை ஏற்படுகிறது. இந்தாண்டாவது காலி பணியிட பட்டியலை முன்கூட்டி வெளியிட ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.