அறிவுத்திறன் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி

அறிவுத்திறன் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு பயிற்சி
அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க, சிறப்பு பயிற்சி நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்
துறை அறிவுறுத்தியுள்ளது.தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.
மாணவர்களின் தனித்திறன் மற்றும் பொது அறிவை வளர்ப்பதற்கு, அரசு பள்ளிகளில் போதிய பயற்சியின்மையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இதில், மிக குறைவான சதவீதத்தில் இருப்பது துவக்க மற்றும் நடுநிலை மாணவர்களே. இதை தவிர்க்கும் வகையில், மாணவர்களின் திறமையை அடிப்படை வகுப்பு முதலே வளர்க்கும் விதமாக, வரும் கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு அமைப்புகள் சார்பில், குழந்தைகளுக்கான அறிவுத்திறன், கல்வி இணை செயல்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 10:1 என்ற வீதத்தில் கூட, அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதில்லை. இந்நிலையை மாற்றும் வகையில், மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதிலும், போட்டிகளில் அவர்களை ஈடுபடுத்தும் வகையிலும், சிறப்பு பயிற்சிஅளிக்க, ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.சில பள்ளிகளில், பொது அறிவு மற்றும் அன்றாட நடப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக, மாணவர்களுக்கு நாள்தோறும் சிறப்பு பயிற்சி அளித்து போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெறுவோருக்கு, பரிசு வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். இந்நடைமுறையை, அனைத்து அரசு பள்ளிகளிலும் பின்பற்றலாம். இதுதொடர்பான சிறப்பு பயிற்சியை கட்டாயமாக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.