தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

சேலம்: சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்' என, கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு, பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல், கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சத்துணவு ஊழியர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் சத்துணவு வழங்குவது பாதிக்கப்படாமல் இருக்க, கல்வித்துறை, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் விவரம்:

* சத்துணவு ஊழியர் வராமல் இருக்கும் பட்சத்தில், தலைமை ஆசிரியர் உடனடியாக, தற்காலிக ஊழியர்களை தயார் செய்து, சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், சத்துணவு தயாரான பின், அவற்றை சாப்பிட்டு பார்த்த பின்பே, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.

* சத்துணவு உரிய நேரத்துக்கு முன்பே தயார் செய்துவிட வேண்டும்; எக்காரணம் கொண்டும் தாமதிக்கக்கூடாது.

* பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுவது, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு. அதில் புகார் எழுந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.