சத்துணவு ஊழியர் நாளை முதல் வேலைநிறுத்தம்

சென்னை: 'மூன்று அமைச்சர்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கும்' என, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 15 முதல், கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்தது. வேலைநிறுத்த கடிதம், பிப்., 18ம் தேதி, அரசுக்கு வழங்கப்பட்டது. நேற்று தலைமைச் செயலகத்தில், அவர்களுடன் பேச்சு நடந்தது. இதில், போராட்டம் அறிவிக்காத சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஊழியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் வளர்மதி, பழனியப்பன், வீரமணி, ஆகியோர் பேச்சு நடத்தினர். சில கோரிக்கைகளை மட்டும் ஏற்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை சில சங்கங்கள் ஏற்றன; போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்தன. ஆனால், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என, அறிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்க தலைவர் பழனிச்சாமி கூறும்போது, 'பிரதான கோரிக்கைகளான, வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் குறித்து, அமைச்சர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை,'' என்றார். 'போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது