8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.


          மாநில தலைவர் ஏ.கனகராஜ் தலைமை தாங்கினார். ஜி.ஆர். ஸ்ரீதர், ஆர். நடராஜன், நிர்மலா, சந்திரசேகரன், எஸ்.ஆர். அனந்தராமன், என்.ராஜன், ஜெரால்டுபின்னி, அருள் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவர்னர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார்.

மாநாட்டில் கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் பள்ளி நிர்வாகி புருஷோத்தமன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் தீர்மானங்களை விளக்கி பேசியதாவது:–
தனியார் பள்ளிகளுக்கு எவ்வித காரணமும் இல்லாமல் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. எவ்வித நிபந்தனையும், நிர்ப்பந்தமும் இல்லாமல் உடனடியாக தொடங்க தற்காலிக, தொடர் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
ஒரு ஆண்டு அல்லது 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குவதை நிறுத்தப்பட வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளை போல அங்கீகாரத்தை ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும். 3 ஆண்டு அங்கீகாரத்தை 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்.
சமச்சீர் பாட புத்தகத்தை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். பாடப்புத்தக விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
8–ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி, மாணவர்களை கண்டிக்க கூடாது என்பதில் மாணவர்கள் படிக்க தெரியாமலும், எழுத தெரியாமலும் 9–ம் வகுப்பிற்கு வருகின்றனர்.
இதனால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் இல்லாமல் போய் விடுகிறது. தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பார்த்து எழுதுதல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே பழைய முறையே இருக்க வேண்டும். 8–ம் வகுப்பு வரை தேர்ச்சியை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளை தனியார் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.