ஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு; ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்

ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ரத்து, வேளாண் பிரிவுக்கு வசதியின்மை போன்ற நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளில் வேளாண் படிப்புக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட, வேளாண் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
           தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கணிதம் - அறிவியல், கணிதம் - கம்ப்யூட்டர் சயின்ஸ், அறிவியல் போன்றவை முதன்மை பிரிவுகளாகவும், கணிதப் பதிவியல் இரண்டாம் பிரிவாகவும் வைக்கப்பட்டு உள்ளன; தொழில் கல்வி, மூன்றாம் பிரிவாக பெயரளவில் உள்ளது.

வேளாண் படிப்பு, அரசுப் பள்ளிகளில், பின்தங்கிய வகுப்பாக தொழிற்கல்விப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. கல்வித் துறை முதன்மை பிரிவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, வேளாண் பிரிவுக்கு அளிப்பதில்லை.

பசுமை புரட்சி:ஆசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம்; ஆசிரியர்கள் பணி மாறுதல் பெறத் தடை; ஆய்வக வசதியின்மை; செய்முறை வகுப்புக்கான தொழில்நுட்பக் கருவிகள் வழங்காதது; வேளாண் தொடர்பான கருத்தரங்கம்; சிறப்பு பயிற்சி வகுப்பு; வேளாண் கல்வி சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடுகள் செய்யாதது என, பல வகைகளில், வேளாண் பிரிவு ஓரங்கட்டப்படுகிறது.

பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி இயற்கை வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மை என, உலக வங்கி நிதியில், தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த, 'தொலைநோக்குப் பார்வை - 2023' திட்டத்தில், வேளாண் துறையில் நிலைத்தன்மை மற்றும் இரண்டாவது பசுமைப் புரட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், வேளாண் கல்வியை பள்ளிக்கல்வித் துறை ஓரங்கட்டி வரும் நிலையில், வேளாண் பட்டதாரிகளின்றி, அ.தி.மு.க., அரசின் கனவுத் திட்டம் நிறைவேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு நெருக்கடிகளால், வேளாண் பிரிவில் பணியாற்ற ஆசிரியர்கள் விரும்பாமலும், காலியிடங்களை நிரப்ப அரசு முன்வராததாலும், வேளாண் பிரிவுகள் மொத்தமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில், பிஎஸ்சி அக்ரி படிப்பில், பிளஸ் 2 படித்த, வேளாண் மாணவர்கள் இல்லை என்ற நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

முற்றுகையிட முடிவு:இதையொட்டி, வேளாண் பிரிவை முதன்மை பாடமாக அறிவிக்கக் கோரி, வரும் 30ம் தேதி, கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட, வேளாண் ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர், மாதவன் கூறியதாவது:

பணி மாறுதல் கலந்தாய்வு இன்றி, மனைவி, பிள்ளைகளை விட்டு, வேளாண் ஆசிரியர்கள் பல ஆண்டுகள், தனியாக வெளியூர்களில் பணியாற்றுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் பலர் பணியை விட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டாவது பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிக்க வேண்டும்.

வேளாண் செயல்முறைகள் பாடத்தை, அனைத்துப் பிரிவுகளிலும் முக்கியப் பாடமாக கொண்டு வர வேண்டும். வேளாண் பிரிவை முதன்மை பாடப் பிரிவாக்க வேண்டும். காலியிடங்களை உடனே நிரப்பி, அனைத்துப் பள்ளிகளிலும், வேளாண் பிரிவு கொண்டு வர வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, 30ம் தேதி, பள்ளிக்கல்வி இயக்குனரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.