பிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு? திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் எழுந்ததால், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 95 சதவீத தேர்ச்சி இலக்கை நோக்கி, விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. மார்ச் 16ம் தேதி முதல், மொழிப்பாட விடைத்தாள் திருத்தம் துவங்கியது. படிப்படியாக, மற்ற பாடங்களுக்கு விடை திருத்தம் துவங்கி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும், 73 மையங்களில், 30 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வின் போது எழுந்த பல புகார்களால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுமோ என, கல்வித்துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

* ஓசூரில், 'வாட்ஸ் அப்'பில் கணித வினாத்தாள் வெளியான விவகாரம்.

* வேதியியல் தேர்வில், சிக்கலான கேள்விகள்.

* கடினமான விலங்கியல் வினாத்தாள்.

* வேளாண் செயல்முறை தேர்வு கேள்வியில் குளறுபடி.

* கணித பதிவியல் தேர்வில் கடின வினாக்கள்.

* பொருளியலில் கேள்விகளில் மாற்றம் என, பல பிரச்னைகள் எழுந்தன.

மாணவர்களிடம், 'பிட்' பிடிபட்ட விவகாரத்தில், ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்:' 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, 'மெமோ' தரப்பட்டது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்தது.

இதேபோல், விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடுகள் அல்லது குளறுபடிகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தேர்வுத்துறை பிறப்பித்த எச்சரிக்கையும், ஆசிரியர்களை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதனால், விடைத்தாள் திருத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தேர்ச்சி விகிதம் குறைந்து விடக் கூடாது என்று, கல்வித்துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு, 95 சதவீத தேர்ச்சி இலக்கை அடைந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாதனையாக காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால், 'தேர்ச்சி குறைந்து விடக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கியே, ஆசிரியர்களின் திருத்தப் பணியும் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் திருத்தப் பணிகளில் உள்ளதால், அவர்களுக்கு தேர்ச்சி இலக்கு குறித்து, வழிகாட்டுதல் வழங்கியுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், சராசரிக்குக் கீழான மாணவ, மாணவியர், இந்த ஆண்டு தேர்ச்சி பெற, பொதுத் தேர்வோ, கடின வினாத்தாள்களோ தடையாக இருக்காது என்று தெரிய வந்துள்ளது. அதே நேரம், விடைத்தாளில் அதிக மதிப்பெண் வழங்கினால், சட்ட சிக்கல் வந்து விடக் கூடாதே என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.