ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN

அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகம் என்றால் தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய  கொள்கைகளால் ஆசிரியர்கள் அந்த மதிப்பை இழந்துள்ளனர். கூடவே அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உயரதிகாரிகள் நடத்தும் லீலைகளால் அதிகம்  பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். அது பென்ஷன் திட்டத்தில் இருந்து பதவி உயர்வு
வரை அனைத்திலும் முறைகேடு, ஊழல் புகுந்து விளையாடுகிறதுஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தாலும், போராட்டம் நடத்தினாலும் அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, ஆசிரியர்கள்  தினந்தோறும் விரக்தியுடனே பணிக்கு சென்று திரும்புகின்றனர்.
எனினும் கல்வி என்று வந்துவிட்டால் தங்கள் கடமையில் இருந்து அவர்கள் தவறுவதே இல்லை. எப்படியாவது தங்கள் பள்ளி பொதுத் தேர்வில் தேர்ச்சி 100  சதவிதம் இலக்கை எட்ட வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை மட்டும் அரசும், அவர்களுக்கு ஒத்து ஊதும்  அதிகாரிகளும் ஏனோ கண்டுகொள்வதே இல்லை என்கிற குறை மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பென்ஷன் திட்டத்தில்  இடைநிலை ஆசிரியர்கள் 40,000 பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் 20 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓய்வூதியத்தில் பாகுபாடு:மத்திய அரசின்  கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி சர்வீஸ் இருந்தால் அவர்கள் ஓய்வு ஊதியத்துக்கு தகுதியுள்ளவராக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால்  தமிழகத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால்தான் ஓய்வு ஊதியம் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலர் முழு ஓய்வூதிய பலனை  பெறமுடியாமலேயே பணி ஓய்வு பெறுகின்றனர்.
சொந்த பணத்தை செலவிடும் ஆசிரியர்கள்: அரசு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வழங்கும் 14 வகையான நலத்திட்ட பொருட்களை ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் மாவட்ட கல்வி  அதிகாரி அலுவலகத்துக்கு சென்று எடுத்து வர வேண்டும். அதற்கான செலவுத் தொகையை அரசு கொடுப்பதில்லை. இந்த செலவை தலைமை ஆசிரியரோ  அல்லது பள்ளி ஆசிரியரோ செலவிட வேண்டும். இந்த செலவுத் தொகையை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது.
பள்ளி பணியில் தொய்வு: அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வாங்குவதற்காக மாவட்ட தலைமையிடத்துக்கு ஓராசிரியர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் செல்ல வேண்டும்இதனால் பள்ளியை மூடிவிட்டு செல்ல வேண்டும். இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களின்  குற்றச்சாட்டுக்கும் ஆசிரியர் ஆளாக வேண்டி உள்ளது.
ஆரோக்கியத்துக்கு ஆப்பு: பள்ளி ஆசிரியர்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல்நிலை இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், அதையெல்லாம் அரசு கருத்தில் கொள்வது  இல்லை. அவர்களை தேர்தல் வாக்குபதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்துகிறது. அந்த பணிக்கும் பயிற்சிக்கும் வராத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்  உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.ஆசிரியர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் சாப்பாடு போன்ற ஏற்பாடுகளை அரசு இயந்திரம் சரியாக செய்து  கொடுப்பதில்லை. இதனால் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ள ஆசிரியர்கள் அயல்பணிக்கு செல்லும் இடத்தில் அவதிப்படுகின்றனர்அவர்களில் பலர் பணி முடிந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலைதான் உள்ளது.
ஆசிரியைகளின் சங்கடம்: ஆண்களை போல இத்துறையில் உள்ள பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. ஒத்தையடி பாதை மட்டுமே உள்ள கிராம பள்ளி, மலை கிராமங்களில்  உள்ள பள்ளிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தினந்தோறும் பஸ்சில் சென்று வருவதற்குள் அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு  அவர்களிடம் இல்லை என்றே கூறலாம். மேலும் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பள்ளி விழாக்களை முடிப்பதற்குள் இரவு ஆகிவிடுகிறது. அந்த சூழலில்  பயந்த நிலையில்தான் உயிரை கையில் பிடித்தபடியே வீட்டுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சில நேரங்களில் அயல்பணிக்காக ஆசிரியைகள்  வீடுவீடாக செல்லும்போது குடிகாரர்கள், ரவுடிகள் மற்றும் ஜொல்லர்களின் தொந்தரவுகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இந்த அயல்பணிக்கு விருப்பம்  இல்லையென்றாலும் கண்டிப்பாக போக வேண்டிய சூழல் உள்ளது.
அமைச்சர் பெயரில் அட்டகாசம்: மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் விழாக்களுக்கு அமைச்சர் வருகிறாரோ இல்லையோ, அவரின் பெயரை சொல்லி நிதி வசூலிப்பது அரசியல்  கட்சிகளில் மட்டும் நடப்பது இல்லை.அமைச்சரின் பெயரைச் சொல்லி மாவட்ட அதிகாரிகள் ஒரு பள்ளிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். பள்ளிகளின்  சார்பில் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும். மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்காக ஒரு வாரமாக வியாபாரிகள் மற்றும் நன்கொடையாளர்களை சந்தித்து பணம் சேகரிக்கின்றனர். சில நேரங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து  பணத்தை தருகின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அமைச்சருக்கு கேடயம், பட்டு சால்வை. சிக்கன், மட்டன் போன்ற உணவு வகைகள். அவர்களுடன் வரும்  அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் என்று அனைத்து  செலவுகளும் ஆசிரியர்களின் தலையிலேயே விழுகிறது. அமைச்சர்களின்  பெயரை பயன்படுத்தி அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைக்கும் அளவே கிடையாது.
பயிற்சி காலத்தில் சம்பளம் பிடிப்பு: வருவாய் துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பயிற்சிக்காக செல்வது வழக்கம். அந்த பயிற்சி காலமும்  பணிக்காலமாகவே கருதப்படும். ஆனால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் நடத்தும் பயிற்சி, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்  நடத்தும் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் பயிற்சி காலமாக கணக்கில் எடுத்து கொள்வது இல்லை. அந்த நாளை விடுப்பு  நாளாக கணக்கிட்டு, அதிகாரிகள் சம்பளத்தை பிடித்துவிடுகின்றனர். இதற்கு முழுக்க முழுக்க அதிகாரிகளே காரணம்.
மாணவர்களை குழப்பும் இரட்டை கல்வி முறை: தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏபிஎல் என்ற செயல்முறை அடிப்படை கற்றல் முறை உள்ளது. பாடம் தொடர்பான அட்டைகளை வைத்துக்  கொண்டு பாடம் நடத்த வேண்டும். அத்துடன் புத்தகங்களையும் வைத்துக் கொண்டு பாடம் நடத்த வேண்டும் என இரண்டு முறைகளை ஆசிரியர்கள் மீது  கல்வித்துறை திணித்துள்ளது. இதனால், மாணவர்கள் சில நேரங்களில் குழம்பி விடுகின்றனர். ஆசிரியர்கள் என்னதான் விரிவாகவும் புரியும்படியும் பாடங்களை  நடத்தினாலும், இந்த இரட்டை முறைகாரணமாக மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
தத்தளிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்:பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.7000 வரை தொகுப்பூதியம் வழங்குகின்றனர்ஆனால் அதையும் மாதாமாதம் கொடுப்பதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை கொடுக்கின்றனர். இதனால் பகுதி நேர ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருதலைகொள்ளி எறும்பு: அரசு பள்ளிகளிகளில் பருவத் தேர்வு நடைபெறும் நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க கூட நேரம் கிடைப்பதில்லை. அவர்களை  மத்திய, மாநில திட்டங்களான தேர்தல் பணி, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, ஆதார் அட்டை வழங்கும் பணிக்கு  ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், மாணவர்களிடையே படிப்பில் ஒருவித பிடிப்பின்மை ஏற்படுகிறது. இதற்கு வழங்கும் ஊதியமும் குறைவு. இந்த பட்டியல்  பணியின்போது சிறிய தவறுகள் ஏற்பட்டாலும் தண்டனை கிடைக்கிறது. இதனால் ஆசிரியர்கள் இருதலை கொள்ளி எறும்புகளாக திணறுகின்றனர்.
பணி பாதுகாப்பு அம்பேல்: ஒரு சினிமாவில் வரும் வசனம் இது. அதோ போறானே.. அவனை ஈசியா அடிக்கலாம். ஏண்டா அப்படிச் சொல்ற..ஏன்னா.. அவன் டீச்சரா இருக்கான். அவனை  அடிச்சா திருப்பி அடிக்க மாட்டான்’’ என்று அந்த கதாபாத்திரம் பதில் சொல்லும்.அந்த நிலைதான் இன்று தமிழகத்தில் இருக்கிறது. நன்றாக படிக்காத  மாணவனை கண்டித்தால், அவன் தந்தையுடன் ஒரு ரவுடி பட்டாளத்தையே அழைத்து வந்து ஆசிரியரை துவம்சம் செய்து விட்டு செல்கிறான். படிக்கச் சொல்லி  அடித்தால், மனித உரிமை கமிஷனுக்கு செல்கிறார்கள். பெண் ஆசிரியைகளை, மாணவர்களே கேலி செய்யும் நிலை உள்ளது. சமீபத்தில் கூட பூந்தமல்லியில்  ஒரு பெண் ஆசிரியையை பள்ளி மாணவன் ஒருவன் கம்ப்யூட்டர் வகுப்பில் அடித்துள்ளான். பிரச்னை பத்திரிகையில் வந்து பெரிதான பிறகு அவன் பள்ளியில்  இருந்து துரத்தப்பட்டான். அதுவரை அந்த பெண் ஆசிரியை பட்ட அவஸ்தைக்கு என்ன விலையை தரப்போகிறது அரசு. விடைக்கு உரிய மதிப்பெண் அளித்தால்  கூட, குறைவான மதிப்பெண் அளிக்கிறாயா என்று ஆசிரியரை அடிக்கும் நிலைதான் உள்ளது.
மற்ற பிரச்னைகள்: 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை உள்ளதால் மாணவர்களை படிக்க வேண்டும் என்று ஆசிரியர் கட்டாயப்படுத்த முடியாது. அதனால் மாணவர்கள் அடிப்படைக்  கல்வியை எப்படி பெற முடியும்.

கெஞ்சி கூத்தாடும் ஆசிரியர்கள்: ஓசோன் பாதுகாப்பு தினம், ஆசிரியர் தினம், சுதந்திர தினம், உலக சுற்றுச் சூழல் தினம் என்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போது அதையும் கடந்து  மின்சார சிக்கனம், டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்தும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும். அதற்காக துண்டு நோட்டீஸ், பேனர் மற்றும் பதாகைகள் தயாரிக்க வேண்டும். போலீஸ் பர்மிஷன் உள்ளிட்டவற்றிற்காக ஒரு கணிசமான பணத்தை  அரசு தரவேண்டும். ஆனால், பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்திலும், சிலர் வியாபாரிகளிடம் சென்று கெஞ்சி கூத்தாடி பணத்தை பெற்று விழிப்புணர்வு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கின்றனர்.