அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் சமர்ப்பிக்கவேண்டும் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு
அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதுப்பிக்கும் புதிய திட்டம்
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்
சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம்
ஒன்றை கொண்டுவருவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேசிய
வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு மற்றும் அங்கீகரிப்பு திட்டம் என்ற அந்த
திட்டம், இந்த மாதம் மார்ச் 3-ந் தேதியில் இருந்து அமலுக்கு
கொண்டுவரப்படவுள்ளது.
நோக்கம் என்ன?
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், வாக்காளர் பட்டியலில்
ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள் தாமாக அதை தெரிவிக்க
முன்வருவது; எதாவது திருத்தம் செய்யவேண்டும் என்றால் அதற்கான விண்ணப்ப
படிவங்களைக் கொடுக்க வாய்ப்பை அளிப்பது;
மேலும், தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை எதிர்காலத்தில் அளிப்பதற்கு
வசதியாக, வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண், தங்களது அல்லது குடும்பத்தினரின்
செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை கொடுப்பது ஆகியவையாகும்.
சிறப்பு முகாம்கள்
இதுதொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 12-ந் தேதியில்
இருந்து ஜூலை வரை ஒவ்வொரு மாதமும் ஒரு முகாம் நடத்தப்படும். அப்போது,
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள்,
அதை நீக்குவதற்காக 7-ம் எண் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
சில தகவல்களை மாற்றவேண்டும் என்றால் அதற்காக எண் 8 படிவத்தை
அளிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் எடுக்கப்பட்ட
புகைப்படத்தை வைத்து மாற்ற வேண்டும் என்றால் அதையும் கொடுக்கவேண்டும்.
ஆதார் எண், செல்போன் எண்
மேலும், அனைத்து வாக்காளரும் ஆதார் எண், செல்போன் எண், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்றவற்றையும் கொடுக்கவேண்டும்.
இந்த முகாமில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகள், உதவி அதிகாரிகள்
இருப்பார்கள். அவர்கள் அந்த விண்ணப்பப் படிவங்களை வாங்கிக்கொள்வார்கள்.
விசாரணை தேவை என்றால் அதை முடித்து 15 நாட்களுக்குள் அந்த விண்ணப்பங்கள்
குறித்து முடிவு செய்வார்கள்.
தண்டனை குற்றம்
வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பது
தண்டனைக்குரிய குற்றம். எனவே உண்மையை கூறுவதற்கு அளிக்கப்படும் இந்த
வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் தவறில்லாத
தேர்தல் நடப்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.