6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில், 'பிட்' வைத்திருப்பதை
கண்டுபிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த, இரு தினங்களில், தேனியில், மூவர்; தஞ்சையில், ஒருவர்; நாகை மாவட்டத்தில், இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதாக, 30 ஆசிரியர்கள், கூண்டோடு தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல், திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்கள், 'பிட்' அடிப்பதை பிடிக்காதது ஏன் என விளக்கம் கேட்டு, 20 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுத்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 51 பேர்:

நேற்று, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், 48 மாணவர் உட்பட, 51 பேர் முறைகேடு தொடர்பாக சிக்கியுள்ளனர். அதிகபட்சமாக, கடலூரில், 22; விழுப்புரத்தில், 20; திருவண்ணாமலையில், நான்கு; திருச்சி மற்றும் வேலூரில், தலா ஒருவர்; ராமநாதபுரத்தில், இரண்டு தனித் தேர்வர்; மதுரையில், ஒரு தனித் தேர்வர் சிக்கியுள்ளனர். கடந்த, 19ம் தேதி தமிழ் முதல் தாள் தேர்வில், 25 தனித் தேர்வர் மட்டுமே சிக்கினர். ஆனால், ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, தேர்வுத் துறை கண்டிப்பாக உத்தரவிட்டதால், நேற்று நடந்த தேர்வில் சிக்கியோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகவும், அதிலும் மாணவர் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.