பிளஸ் 2 வினாத்தாள் 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய விவகாரம்: சி.இ.ஓ., அலுவலகத்தில் போலீசார் விசாரணை

ஓசூர்: பிளஸ் 2 வினாத்தாள், வாட்ஸ்அப் மூலம் வெளியானது தொடர்பாக, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள் 'வாட்ஸ்அப்'பில் வெளியான விவகாரம் தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ் உள்பட, ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோரிடம் தேர்வு அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, சாம்சங், சோனி ஆகிய இரு மொபைல்போன்களை, சென்னைக்கு அனுப்பி, அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்படுத்த, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார், கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர். ஓசூரில், பிளஸ் 2 தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிய எந்தெந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்டோர் எப்படி தேர்வு மைய அறைக்குள் கண்காணிப்பு பணிக்கு வந்தனர் என்ற விவரங்களை, அதிகாரிகளிடம் கேட்டு போலீசார் தெரிந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும், தேர்வு மைய கண்காணிப்பாளர் பணி யாருக்கெல்லாம் ஒதுக்கப்பட்டது. அதில் யாரெல்லாம் விடுப்பில் சென்றனர் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரிகளிடம் இருந்து, பல தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், 'ரெக்கவரி டேட்டா சாப்ட்வேர்' மூலமாக, மொபைல் போன்களில் இருந்து அழிக்கப்பட்ட விபரங்களை பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஆசிரியர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை, நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர். அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், அதில் இருந்து யாருக்கெல்லாம் வினாத்தாள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டது, இதற்கு விடை அனுப்பப்பட்டதா என்ற விவரங்கள் தெரியவரும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.