பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி துறை இயக்குனர்

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அரக்கோணத்திற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கல்வி துறை மூலம் தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு கட்டிட வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகம், நூலகம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்க 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் அவர்களது வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாணவிகள் அதிகமாக படிக்கும் 436 பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பறை வசதி செய்து கொடுக்க ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.

பாட புத்தகங்கள்

2015-2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கும் போது 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

2016-2017-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பாடபுத்தகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட உள்ளது. தேர்வு முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.