அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு

மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
          ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வருவதை ஒட்டி ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி:
 
                நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன்பின் தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அடிப்படையில், மார்ச் 30, 31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாள்கள் விடுமுறை? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதியும் (திங்கள்கிழமை), நிகழ் நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும். மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கப்படுவதால் ஏப்ரல் 1-ஆம் தேதியும், ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய மூன்று நாள்களும் தொடர் விடுமுறையாகும். ஏப்ரல் 4-ஆம் தேதி அரை நாள் மட்டும் செயல்படும். இதனால், அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை இரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.