SCERTல் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக
படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.

அதன்படி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம்) சார்பில் பயிற்சி தொடங்கியது. பயிற்சி 5 கட்டமாக நடக்கிறது. நேற்று மட்டும் 80 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 400 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
இந்த பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. தலைமை ஆசிரியர்கள் நேரம் தவறாமல் சரியாக பள்ளிக்கூடத்திற்கு செல்லவண்டும், அவர்களுக்கு உரிய பல்வேறு பதிவேடுகளை அவர்கள் முறைப்படி, சரியாக பராமரிக்க வேண்டும், கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களை சிறந்தவர்களாக விளங்க வைக்கவேண்டும், பள்ளிகளில் எந்த காரணத்தை கொண்டும் ஒழுங்கீன செயல்கள் நடக்கக்கூடாது, நல்ல நோக்கம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடிகர் தாமு உள்ளிட்ட பல நிபுணர்கள் வந்து ஆசிரியர்களுக்கு நல்ல நோக்கம் உள்பட பலதலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் செய்திருந்தார்.