பாதுகாப்பு மையங்களுக்கு வந்துசேர்ந்த பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மற்றும் டாப்சீட்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மற்றும் டாப்சீட், கோவை பாதுகாப்பு மையங்களுக்கு வந்துள்ளன. டாப்சீட் மற்றும் விடைத்தாள் பக்கங்களை தைக்கும் பணி செய்முறை தேர்வுக்கு பிறகு துவக்க திட்டமிட்டுள்ளதாக, முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தெரிவித்தார்.

    பொதுத்தேர்வுகளின்போது மாணவர்களின் கால விரயம், கண்காணிப்பாளர்களின் பணிப்பளுவை குறைத்தல், தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும் வகையில், 2013-ஆம் ஆண்டு முதல், மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களும், மற்ற பாடங்களுக்கு, 54 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்களும் வழங்கப்பட்டன.

இதில், தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள்களை அதிகளவில் வீணாக்குவது தெரியவந்ததால், நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் மாதம் நடக்கவுள்ள தேர்வுகளில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்களுக்கு, 22 பக்கங்களுடன் கோடிட்ட விடைத்தாள்களும், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கு, 32 பக்கங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு, 26 பக்க விடைத்தாள்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கான மொழிப்பாடங்களுக்கு, 30 பக்கங்களுடன் கூடிய கோடிட்ட விடைத்தாள்களும், கணக்குபதிவியல் பாடத்திற்கு, 1 முதல், 14 பக்கம் வரை கோடில்லாமலும், 15 முதல், 46 வரை கோடுகளுடன் கூடிய விடைத்தாள்களும், கணினி அறிவியல் பாடத்திற்கு, 30 பக்கம், இதர பாடங்களுக்கு 38 பக்கங்களுடனும் விடைத்தாள் தயார் செய்யப்பட்டுள்ளன.

பாடவாரியாக, விடைத்தாள்களை அடையாளம் தெரிந்துகொள்ள சிறப்பு கோடு வழங்கப்பட்டுள்ளது. இவ்விடைத்தாள்கள், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவின் பேரில், கடந்த 23ம் தேதி முதல் மண்டல அலுவலகங்களிலிருந்து, விடைத்தாள்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திற்கு, டாப் சீட் வந்து சேர்ந்துள்ளன. டாப் சீட் மற்றும் விடைத்தாள் உள்ளிட்டவைகளை இணைத்து தைப்பதற்கான பணிகள் விரைந்து துவங்கவுள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "பிளஸ் 2 மாணவர்களுக்கு 6ம் தேதி செய்முறை தேர்வுகள் துவங்கவுள்ளதால், தேர்வு பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் டாப்சீட் இணைத்து தைக்கும் பணி விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆயத்த கூட்டம் 5ம் தேதி நடத்தப்படவுள்ளது" என்றார்.