இறை வணக்கத்தில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

டெங்கு : பள்ளி மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு - இறை வணக்கத்தில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள்
மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்பதற்கு, அனைத்து பள்ளிகளிலும் தினமும் இறை வணக்கத்தின் போது, டெங்கு ஒழிப்பு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்க வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழைநீர் தேங்காமல், உரல், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது வீட்டை சுத்தப்படுத்துவேன். இதை எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் எடுத்துக்கூறுவேன். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் முன் மாணவர்கள், உறுதிமொழி ஏற்க வேண்டும். அதன் படி தாம்பரம் நகராட்சியில் 14 பள்ளிகள், பல்லாவரம் நகராட்சியில் 43 பள்ளிகள், பம்மலில் 12 பள்ளிகள் மற்றும் பிற நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், டெங்கை ஒழிப்பதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம். மாணவர்களிடம் இந்த கருத்தை பரப்பினால், ஒவ்வொரு வீட்டிற்கு சென்று நாங்கள் கருத்துக்களை பிரதிபலித்தது போல் அமையும் என்றார்.