பொதுத்தேர்வு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல்
துவங்குகிறது. தற்போது, செய்முறை தேர்வு நடந்து வருகிறது. 100 சதவீத
தேர்ச்சி என்ற இலக்குடன், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில்
ஆசிரியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், உலகக் கோப்பை
கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது; அடுத்த மாதம் முழுவதும், இத்தொடர்
நடக்கிறது. மாணவர் மத்தியில் கிரிக்கெட் ஆர்வம், அதிகமாக உள்ளது; பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில் பலரும், கிரிக்கெட் விளையாடுவதிலும், உலகக்
கோப்பை கிரிக்கெட் போட்டியை "டிவி'யில் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவர்.
இதனால், படிப்பில் கவனம் சிதறும் என்ற அச்சம், ஆசிரியர்களுக்கு
ஏற்பட்டுள்ளது.
கே.எஸ்.சி., அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவத்திடம் கேட்ட போது, ""தேர்வு
நேரத்தில், கிரிக்கெட் போட்டி நடப்பது, கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் எதிர்காலத்தை, பொதுத்தேர்வு தீர்மானிக்கிறது. ""தற்போது நடக்கும்
கிரிக்கெட் போட்டி, மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுத்தேர்வு வாழ்க்கையில் மிக முக்கியமானது; அதற்கே முக்கியத்துவம் தர
வேண்டும் என்பதை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுறுத்தி வருகிறோம்,''
என்றார்.