பணி நியமன முதல் கால முறை ஊதியம்; அரசாணையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள்

பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.


             கடந்த, 2003 முதல் 2006 வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 40 ஆயிரம் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பதிவு மூப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 10 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் என, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,000 ரூபாய், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,500 ரூபாய் என, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த அவர்களை, கடந்த, 2006, ஜூன் 1ம் தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தது. 

இருப்பினும், தங்களது பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் கேட்டு, ஆசிரியர்கள் போராடி வந்தனர்; அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.கடந்த, 2012, பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்டசபையில் இதுதொடர்பான கேள்வி எழுந்த போது, அரசு பரிசீலனை செய்து வருகிறது என, பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், 50 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணி நியமன நாள் முதல், கால முறை ஊதியம் வழங்கி, அரசாணை பிறப்பிக்கும் உத்தரவை வெளியிட வேண்டும் என ஆசிரியர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள்  எதிர்பார்க்கின்றனர்.