மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்கிறது !

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி
உயர்த்தப்பட்டது.
இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் (மார்ச்) மத்திய மந்திரி சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 107 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயருகிறது. ஜனவரி 1–ந் தேதி கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் அடைவார்கள்.

ஜனவரி 30–ல் டிசம்பர் மாதத்திற்குரிய தொழில் துறை ஊழியர் திருத்திய நுகர்வோர் குறியீட்டு எண் வெளியானதன் அடிப்படையில் சரியான அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.