பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை

:“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்
தார்.அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும்.
அப்போது 2 மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கியதும் உடனடியாக பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுத வேண்டும். விடைத்தாளில் வேறு எந்த குறியீடும் எழுத கூடாது என மாணவர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். தேர்வு முடிந்ததும் விடைத்தாளை முழுமையாக சரிபார்த்த பின்பே மாணவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும், என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாலாமணிமேகலை, ஷெர்மித்ரிச்சர்ட்சிறாப் மற்றும் தலைமைஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தை மறந்த இணைஇயக்குனர்: ஆலோசனை கூட்டம் காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இணை இயக்குனர் கூட்டத்திற்கு வராமல் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இதனால் நீண்டநேரம் தலைமை ஆசிரியர்கள் காத்திருந்தனர். அதன்பின் மாலை 4 மணிக்கு கூட்டம் துவங்கியது.