எஸ்.எஸ்.எல்.சி – பிளஸ்–2 வினாத்தாள் மையங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பு அரசு தேர்வுத்துறை முடிவு


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பை பலப்படுத்த அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ்–2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 5–ந்தேதி தொடங்குகிறது. பிளஸ்–2 தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
தேர்வுக்கான விடைத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டன. மேலும் விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவ–மாணவிகளின் புகைப்படம், தேர்வு பதிவு எண், ரகசிய கோடு ஆகியவை அடங்கி இருக்கும். இந்த தாள் அனைத்து பிளஸ்–2 நடைபெற உள்ள தேர்வு மையங்களுக்கும் ஏற்கனவே அரசு தேர்வுத்துறையால் அனுப்பி வைக்கப்பட்டன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தூரத்து மாவட்டங்களுக்கு முதலாவதாக அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த மாவட்டங்களில் விடைத்தாளுடன் சேர்ந்து முகப்பு பேப்பர் அதாவது முதல் பக்க பேப்பர் ஆசிரியர்களால் தைக்கப்பட்டது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் முகப்பு பேப்பரை வைத்து தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் இதை சென்னை முதன்மை கல்வி அதிகாரி அனிதா பார்வையிட்டு வருகிறார்.
இந்த வருடம் பிளஸ்– 2 தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் கோடு போட்ட தாள்களாக வழங்கப்பட உள்ளன. இந்த நடைமுறை ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்விலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை கடந்த ஆண்டை விட பிளஸ்– 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவேண்டும் என்று பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோர் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் அடிக்கடி அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகளின் தேர்ச்சிக்காக அதிக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பலத்த பாதுகாப்பு பிளஸ்–2 தேர்வு தொடங்க இன்னும் 21 நாட்கள் மட்டுமே உள்ளன. விரைவில் அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பில் அனுப்பப்பட உள்ளன. வினாத்தாள் கட்டு அனுப்பப்பட்ட பிறகு அவை ஒரு அறையில் உள்ள பீரோவில் பூட்டிவைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். அங்கு ஆயுதம் தாங்கிய 2 போலீஸ்காரர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பாக இருப்பார்கள். அதற்காக போலீசார் பணிக்கு மாறி மாறி வருவார்கள். இந்த வருடம் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
அதாவது போலீஸ் பாதுகாப்பு தவிர, கல்வித்துறை அதிகாரிகளும் அவ்வப்போது வினாத்தாள் மையத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. இதற்கான கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான அனைத்து பணிகளையும் அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.