அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2,176 டாக்டர்களை தேர்வு செய்து மூன்று மாதங்கள் ஆகியும், அரசு நியமனம் செய்யாமல் இழுத்தடித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, தேவைக்கேற்ப, 34 உதவி பல்
டாக்டர் உட்பட, 2,176 தற்காலிக உதவி டாக்டர் பணியிடங்கள் புதிதாக
உருவாக்கப்பட்டன. இதற்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் போட்டித்
தேர்வுகளை அறிவித்தது; இதற்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு
அக்., 12ம் தேதி, போட்டித் தேர்வு நடந்தது; இதில், 5,650 பேர் பங்கேற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்றோர் விவரங்களை வெளியிட்ட மருத்துவ பணியாளர் தேர்வு
வாரியம், சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகளை முடித்து, நவ., மாதமே, பட்டியலை,
சுகாதாரத் துறையில் ஒப்படைத்து விட்டது. மூன்று மாதத்திற்கு மேலாகியும்,
புதிய பணி நியமனங்களை செய்யாமல், அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால்,
தேர்வாக காத்திருக்கும் டாக்டர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர். பன்றிக்
காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தடுப்பில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி
வருவதால், இதில், கவனம் செலுத்தப் படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து,
சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய டாக்டர் நியமனத்திற்கு
முன், தற்போது பணியில் உள்ள டாக்டர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை முடிக்க
வேண்டும் என, டாக்டர்கள் வலியுறுத்தினர். இந்த கலந்தாய்வு, விரைவில்
நடத்தப்படும். தொடர்ந்து, 2,176 டாக்டர்களும் நியமிக்கப்படுவர்' என்றார்.