2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!

  2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


           தமிழக அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

              அப்போது, இவ்வாண்டு (2014-15), 5.50 லட்சம் மடிக்கணினிகளும், 2015-16 ஆம் ஆண்டில் 5.50 லட்சம் மடிக்கணினிகளும் என ஆக மொத்தம் 11 லட்சம் மடிக்கணினிகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

2014-15ம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக ரூ.1100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்காக, இவ்வாண்டு (2014-15), 5.50 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணி தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், இத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பணிகளை விரைந்து முடித்து விரைவில் மாணவ மாணவியர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டுமென்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.