தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு குரூப்–1 மெயின் தேர்வுக்கு தகுதியானவர்கள் சான்றிதழ் அனுப்பலாம் அதிகாரி வேண்டுகோள்


சென்னை,
செய்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 20.7.2014 அன்று முற்பகல் குரூப்–1 ல் அடங்கிய 79 பதவிகளுக்கான முதனிலை எழுத்து தேர்வினை நடத்தியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 389
விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய சான்றிதழ்களின் விவரம் மற்றும் தேர்வு கட்டணம் தொடர்பான குறிப்பாணை, விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் அக்குறிப்பாணை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in–ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு பதிவு எண்ணை உள்ளீடு செய்து குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அக்குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ள சான்றிடப்பட்ட சான்றிதழ்களின் நகலினை 17–ந் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.