பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை: தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு
மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள, பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவ, மாணவியர்
எழுதுகின்றனர். இவர்களைக் கண்காணிக்க, 4,000 ஆசிரியர், அதிகாரிகளைக் கொண்ட,
1,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 5 முதல், 31 வரை, பிளஸ் 2 தேர்வு
நடக்கிறது. இந்த தேர்வில், 6,256 பள்ளிகளைச் சேர்ந்த, 3,90,753 மாணவர்கள்,
4,52,311 மாணவியர் என, மொத்தம் 8,43,064 பேர் பங்கேற்கின்றனர். இதில்,
தமிழ் வழியில் தேர்வு எழுதும், 5,56,498 பேருக்கு, 2,377 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட, 16,947 மாணவ, மாணவியர்
கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். சிறைக்கைதிகள், 77 பேர், புழல் மத்திய
சிறையில் தேர்வு எழுதுகின்றனர். காப்பியடித்தல், ஆள் மாறாட்டத்தில்
ஈடுபடாமல் கண்காணிக்க, 4,000 ஆசிரியர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட, 1,000
பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முக்கிய தொழில்நுட்ப பாடத் தேர்வின்
போது, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொண்ட தனிப்படை, தேர்வு மையங்களில்
அதிரடி ஆய்வு நடத்த உள்ளது.
10ம் வகுப்பு தேர்வு:
மார்ச் 19ல் துவங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம்,
புதுச்சேரியிலுள்ள, 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்கள்,
5,32,186 மாணவியர் என, 10,72,691 பேர் எழுதுகின்றனர். இதில், தமிழ் வழி
மாணவர்கள், 7,30,590 பேர். இத்தேர்வுக்கு, 3,298 தேர்வு மையங்களில், 75
ஆயிரம் தேர்வு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்களைக் கண்காணிக்க, 5,200
பேர் கொண்ட, 1,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
புழல் சிறையில்...:
பாளையங்கோட்டை மத்திய சிறையில், 33; கோவை மத்திய சிறை, 97; சென்னை,
புழல்சிறை யில், 111 பேர் தேர்வெழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு,
தரைத்தளத்திலேயே தேர்வு அறைகள் அமைக்கப்படும். வினாத்தாள்கள்
வைக்கப்பட்டுள்ள மையங் களில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., தலைமையிலான
குழுவினர், பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வை செய்கின்றனர்.
புதுச்சேரியில்...:
புதுச்சேரியில், 128 பள்ளி களைச் சேர்ந்த, 6,575 மாணவர்கள், 7,731
மாணவியர், 33 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வையும், 291 பள்ளிகளைச்
சேர்ந்த, 9,703 மாணவர்கள், 9,856 மாணவியர், 48 தேர்வு மையங்களில், 10ம்
வகுப்பு தேர்வையும் எழுதுகின்றனர்.
சென்னையில்...:
சென்னையில், 412 பள்ளிகளைச் சேர்ந்த, 24,653 மாணவர்கள், 28,750 மாணவியர்,
144 தேர்வு மையங்களில், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதேபோல், 578 பள்ளி
களைச் சேர்ந்த, 28,124 மாணவர்கள், 29,230 மாணவி யர், 209 தேர்வு
மையங்களில், 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.