தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்.


தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.

           பிரதம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 2006 முதல் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள் கற்றல் திறன் குறித்து ஆய்வுசெய்து, ஏசர் என்ற தலைப்பில் வெளியிடுகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதும், 577 மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில், மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட, 5,70 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடந்தது.

நாடு முழுவதும் கட்டாய கல்விச் சட்டம் அறிமுகமாகி உள்ள நிலையில், ஏசர் குழு, 15,206 அரசுப் பள்ளிகளையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்கள்; 823 கிராமங்கள்; 17,335 வீடுகள்; 3571, 3 - 5 வயதில் 3571; 6 - 14 வயதில்,13, 948; 15 - 16 வயதுடைய 2,674 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள்;

* 6 - 14 வயதில், பள்ளி சேராத குழந்தைகள் எண்ணிக்கை 2013 ஆண்டை விட, 2014ல் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய அளவை விட மிக குறைவாக உள்ளது.

* 6 - 14 வயதில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. 2014ல், 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான 30.8 சதவீதம் என்பதைவிட அதிகம்.

* மூன்றாம் வகுப்பு மாணவர்களில், முதல் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 29 சதவீதம்; 2014ல், 37.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை 2013ல், 31.9 சதவீதம்; 2014ல், 46.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

* கணித பாடத்தை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

* ஐந்தாம் வகுப்பு மாணவர்களின், ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும் திறன், 2013ல், 57.7 சதவீதம்; 2014ல், 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான 49.2 சதவீதத்தை விட அதிகம்.

* மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வார்த்தைகள் வாசிப்பு திறனும் அதிகரித்துள்ளது.