மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய திட்டம்:சுகாதார துறை பிரதிநிதி தகவல்

  வேலுார்:''பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆரம்ப கட்டத்திலேயே, நோய்களை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம், விரைவில், செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மத்திய அரசின் சுகாதாரத்துறை சிறப்பு பிரதிநிதி செண்பகவல்லி கூறினார்.


          தனி வாகனம்:வேலுாரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பள்ளி மாணவ, மாணவியருக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம், சுகாதாரத்துறையின் ஊரக மற்றும் நகர் பகுதி துறை மூலம் செயல்படுத்தப் பட்டது. தற்போது, இத்திட்டம் தேசிய ஊரக சுகாதார சேவை துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

            தமிழகத்தில், 770 ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு, இரண்டு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொது டாக்டர், உளவியல் டாக்டர், இரண்டு நர்ஸ்கள் இருப்பர். இவர்களுக்கு தனி வாகனம் வழங்கப்படும்.இக்குழுவினர், இவர்களுக்காக ஒதுக்கப்படும் கிராமங்களுக்கு, தினமும் அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை அளிப்பர்.

          ஒரு வயது முதல், 18 வயது வரை உள்ள, அனைவருக்கும், சிகிச்சை அளிக்கப்படும். இதில், ஊட்டச்சத்து குறைபாடு, பல், கண், மன அழுத்தம் குறைபாடுகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப் படும்.இவற்றை கண்காணிக்க, மாவட்ட ஆரம்ப நிலை தடுப்பு மையம் அமைக்கப்படும். இதில், ஐந்து டாக்டர்கள், 10 மருத்துவப் பணியாளர்கள் இருப்பர். இத்திட்டத்தினால், குழந்தைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்து, நோயை குணப்படுத்த முடியும்.

                 மூன்று மாதத்தில்...வேலுார் மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில், 40 குழுக்கள் அமைக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில், இத்திட்டம் செயல்படும்.இவ்வாறு, செண்பகவல்லி கூறினார்.