முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு

சென்னை: சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் பொதுச் செயலர் விஜயகுமார், முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்க ஊதிய விகித முரண்பாடு குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், டிச., 18ல், தமிழக பள்ளிக்கல்வித்துறை எதிர் மனு தாக்கல் செய்தது. அதில், 'கடந்த ஊதியக் குழுவில், முதுநிலை பட்டதாரி - பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊதிய குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்வித்துறையின், 1969 அரசாணையின் படி, உயர்கல்வி ஊக்க ஊதியத்தால் ஏற்பட்டுள்ள வேறுபாட்டை களைய இயலாது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே கல்வித் தகுதியில், ஒரே நாளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை விட அதிகமாக ஊதியம் பெறும் வேறு பாட்டை களைய, வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கல்வித்துறை தாக்கல் செய்த, எதிர்மனுவில் கூறப்பட்டுள்ள முரணான கருத்துக்களை எதிர்த்து, நீதிமன்றம் மூலம், தொடர் நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்து உள்ளோம். அதே நேரம், அரசின் எதிர்மனுவால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ள, கடும் அதிருப்தி யை வெளிப்படுத்த, கிருஷ்ணகிரியில் நடக்கும் பொதுக்குழுவில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.