பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஆய்வு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 19-இல் தொடங்கி ஏப்
ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் என 483 பள்ளிகளில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வை 47 ஆயிரத்து 186 மாணவ, மாணவியரும், பிளஸ் 2 தேர்வை 275 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 38 ஆயிரத்து 106 மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 120 மையங்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 91 மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வெழுதும் வகையில் இருக்கை வசதி செய்யப்படுகிறது.
தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், தேர்வு அறைகளில் மின்விளக்கு, மின்விசிறி வசதிகளும் இருப்பது அவசியம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை முதன்மைக் கல்வி அலுவலர் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி தலைமையிலான கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்யப்பட்டு, தேவைப்படும் வசதிகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.