பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி

  பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தொடரும் சிக்கல்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 
       கோவை மாவட்டத்தில் 15, திருப்பூர் மாவட்டத்தில் 7 வட்டார வள மையங்களை உள்ளடக்கி, கோவை அனைவருக்கும் கல்வி இயக்ககம் செயல்படுகிறது. ஒரு வட்டார வள மையத்துக்கு 10 ஆசிரியர் பயிற்றுனர்கள் வீதம், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுகின்றனர்.ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு, மாவட்ட திட்ட அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என, ஆசிரியர் பயிற்றுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.பயிற்றுனர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, ஊதியத்தில் 10 சதவீதம், இத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இத்தொகை விவரங்கள், மாநில திட்ட அலுவலகம் சார்பில், குறிப்பிட்ட "சர்வரில்' பதிவு செய்யப்படுகிறது. வட்டார வள மையங்களில் இருந்து, ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி செலுத்தப்பட்ட பின்னரும், பதிவு செய்யப்படாமல் இருப்பது, விடுபட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.
 
             இதில், தற்போது கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, 40க்கும் மேற்பட்ட பதிவுகள், விடுபட்ட பங்களிப்பு திட்டத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஒவ்வொரு பயிற்றுனர்களுக்கும், லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை, பதிவு செய்யப்படாமல் உள்ளது.இது தொடர்பாக, கடந்த 2010ம் ஆண்டிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர் பயிற்றுனர்களாக பணிபுரிந்து, தற்போது பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
               கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் மல்லிகா கூறுகையில், ""இப்பிரச்னை குறித்து, மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்வூதிய திட்டத்துக்கு பதிவு செய்யப்படும் மாவட்ட திட்ட அலுவலக குறியீட்டு எண் குறித்து, கருவூலத்தில் கேட்டுள்ளனர். எண் பதிவு செய்த பிறகு, விடுபட்ட தொகை, கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.