மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு

கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து கல்வி நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, தற்போது யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து, பல்கலைகளுக்கு எழுதி உள்ள கடிதம்:


* யு.ஜி.சி.,யால் அங்கீகாரம் பெற்ற, அனைத்து பல்கலைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது நிதி மேலாண்மை திட்டத்தில் (பி.எப்.எம்.எஸ்.,) பதிவு செய்வதுடன், மாணவர்களிடம் விண்ணப்பங்களை, வங்கி கணக்குடன் பெற்று, அவற்றை ஆன்-லைனில், பதிவு செய்ய வேண்டும்.


* அந்த விண்ணப்பங்களை, பி.எப்.எம்.எஸ்., இணையதளத்தில், காலதாமதமின்றி உடனேயே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் மீதான பாகுபாடு களையப்படும்.


* அனைத்து பல்கலைகளும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும்.