தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் கட்டித்தர என்.எல்.சி. நிறுவனம் முடிவு


சென்னை,
தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் கழிவறைகள் கட்டித்தர என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தூய்மை பள்ளித்திட்டம் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய முயற்சி காரணமாக, தூய்மை இந்தியா திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மை பள்ளித்திட்டத்தின் கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ–மாணவிகளுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்கும்படி மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவன திட்டம் மற்றும் செயலாக்க இயக்குனர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
2,500 பள்ளிகளில் கழிவறை வசதி என்.எல்.சி. நிறுவனம் இந்த திட்டத்தில் தனது பங்களிப்பாக தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 2 ஆயிரத்து 500 கழிவறைகளை அமைத்து தர திட்டமிட்டுள்ளது.
இதற்காக அந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கணிசமான தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 599 அரசு பள்ளிகளில் 1,118 கழிவறைகள் கட்டப்பட உள்ளன.
சுகாதாரம் இதற்காக தமிழக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் காலதாமதம் இன்றி முடியும். குறிப்பாக மாணவ–மாணவிகளின் சுகாதாரத்தில் தனது பங்கை அளிப்பதில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெருமிதம் அடைகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் இயக்குனர் பூபதி தெரிவித்துள்ளார்.