போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்:விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு? தமிழக அரசுக்கு அடுத்த சவால்


ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என, முயற்சித்த அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், விரைவில், வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சி முடிவடைய, இன்னும் ஓராண்டே உள்ளதால், சட்டசபை தேர்தலுக்கு முன், போக்குவரத்து கழக ஊழியர்கள் வழியில், நேரடியாக மோதிப்பார்க்கும்
திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.தமிழக அரசில், 150க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் என, 35 முதல், 50 லட்சம் பேர் வரை உள்ளனர். அரசு ஊழியர் என்ற முறையில், அரசின் சலுகைகள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்க வேண்டும். மத்திய அரசுக்கு நிகராக ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதியத்தில் உள்ளவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






வாக்குறுதி:

ஆரம்பத்தில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு, நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு, பின், இழுத்தடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தொடர் போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்களும் தயங்குவர். கடந்த, 2001ல், அ.தி.மு.க., ஆட்சியின்போது, அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, வீடு புகுந்து கைது செய்து, எஸ்மா, டெஸ்மா சட்டத்தில், அவர்களை சிறையில் அடைத்தனர்.





பலன்:

போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தங்களுக்கான ஊதிய ஒப்பந்தம், நிலுவைத் தொகை, ஓய்வூதிய பலன் உள்ளிட்டவற்றை கேட்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு, போராட்டத்துக்கு பணிந்து, பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்துள்ளது. இதே போல் வருவாய் துறை ஊழியர்கள், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம் முதல், பலகட்ட போராட்ட அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். வரும், 8ம் தேதி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், பிப்ரவரி மாதம், மாநிலம் தழுவிய, வேலைநிறுத்தத்தையும் நடத்த, வருவாய் துறை அலுவலர் சங்க மாநில தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதிலும், கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில், போராட்டத்தின் தன்மை மாறும் என, அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருவாய் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அரசு தொடர்பான பணிகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உள்ளது. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்; இதுவரை, அரசு கண்டுகொள்ளவில்லை. மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.





மறைமுக போராட்டம்:

அரசு துறை ஊழியர் சங்கம், சுகாதார அலுவலர் சங்கம், உள்ளாட்சி பணியாளர் சங்கம் போன்றவைகளும், தங்களுக்கு உண்டான கோரிக்கையை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்பதை வலியுத்தி, மறைமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





அரசுக்கு சவால்:

அ.தி.மு.க., ஆட்சி முடிய, இன்னும் ஓராண்டே உள்ளது. அதற்கு முன், தங்களுக்கு தேவையான சலுகைகளை, அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதில், அனைத்து ஊழியர் சங்கங்களும் தீவிரமாக உள்ளன. ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கு, அரசு தயங்கி வருகிறது. தேர்தலுக்கு முன் பெரிய அளவில் வேலைநிறுத்தம் செய்து, அரசை பணிய வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என, அரசு ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு, அரசுக்கு பெரிய சவாலையும், பெரிய பாதிப்பையும் உண்டாக்கும் என்கின்றனர், அரசு துறை ஊழியர்கள்.


- நமது சிறப்பு நிருபர் -