ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம் - டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், நேரடி தகவல் மட்டுமின்றி, அது சார்ந்த இணைப்பு விவரங்களை யும் பெறலாம் என, டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
         ஆர்.டி.ஐ.,ன் கீழ், ஊழல் வழக்கு தொடர்பாக, டில்லி நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு (சி.பி.ஐ.,) இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வழங்க, ஒருவர் கோரியிருந்தார். ஆர்.டி.ஐ., சட்டத்தில் இருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாலும், அத்தகவல் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதாலும், அது தொடர்பான விவரங்களை வழங்க இயலாது என, தலைமை தகவல் ஆணையம் தெரிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி விபு பக்ரூ, ''ஆர்.டி.ஐ., சட்டம் 8 (1) (எச்) பிரிவின் கீழ், உரிய காரண மின்றி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க கூடாது,'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இவ்வழக்கில், மனுதாரருக்கு நிராகரிப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அந்த ஆவணங்கள், எந்த வகையில் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதையும் எடுத்துக் கூறவில்லை. ஆர்.டி.ஐ., சட்டப் பிரிவு 24ன் படி, தகவல் தர விலக்களிக்கப்பட்ட அமைப்புகளுக்கு கூட, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த சட்டத்தை காட்டி, பல அமைப்புகள் தகவல் தர மறுக்கின்றன. வழங்கப்படும் விவரங்கள் வழக்கு விசாரணையை பாதிக்கும் என, வெறும் அனுமானத்தின் அடிப்படையில் கூறக்கூடாது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.