பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்
அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி,
பிளஸ் 2 மாணவ மாணவியர் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள நேரமாக இது உள்ளது.
12ம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வுகளையும், எழுத்து தேர்வுகளையும்
நல்ல முறையில் எழுதி மாநில அளவில் கடந்த கல்வியாண்டில் பெற்ற தேர்ச்சி
சதவீதத்தை காட்டிலும் கூடுதலான தேர்ச்சி பெற்று மாணவ மாணவியர் நல்ல
மதிப்பெண் பெற தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 10ம்
வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரையாண்டு
தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து மாணவர்களை முதல்நிலை, இடைத்தரம், கடைநிலை
என்று இனம் பிரித்து முதல்நிலை, இடைநிலை மாணவர்கள் அதிக மதிப்பெண்
பெறத்தக்க வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடைநிலை மாணவர்களை
வெற்றிபெறச்செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.
காலை 8 மணிக்கு 10ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச்செய்ய வேண்டும்.
அன்று தலைமை ஆசிரியரால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆசிரியர்களும் வருகை
தந்து மாணவர்களை அமைதியாக அமர்ந்து படிக்க செய்ய வேண்டும். 6 முதல் 8
மாணவர்கள் கொண்ட குழுவாக அமர்ந்தும் படிக்க செய்யலாம். மதிய உணவு இடைவேளை
நேரம், மாலை நேரம் போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாலை 6
மணிக்குள் மேற்பார்வை சிறப்பு வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும். எந்த
காரணத்தை கொண்டும் மாலை 6 மணிக்கு மேல் மாணவர்களை பள்ளி வளாகத்தில்
இருப்பதை தவிர்த்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.