பிளஸ்–2 தேர்ச்சி பெறாமல் சட்டம் படித்தவர் வக்கீலாக பணியாற்ற தடை ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 1997–ம் ஆண்டு பாப்புதுரை என்பவர் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் 1999–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்தார். ஆனால் ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அழகப்பா
பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி மூலம் பி.ஏ. படித்தார். அதன் பிறகு 2010–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தோல்வி அடைந்த பாடத்தை எழுதி, பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அதைத்தொடர்ந்து நெல்லை சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்துவிட்டு, 2013–ம் ஆண்டு பார் கவுன்சிலில் வக்கீலாக தனது பெயரை பதிவு செய்ய பாப்புதுரை முயன்றார். ஆனால் அவரது கல்வி குறித்து அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு புகார் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில் பாப்புதுரையிடம் விளக்கம் கேட்டு பல்கலைக்கழகம் நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யும்படி ஐகோர்ட்டில் பாப்புதுரை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்து விட்டு அதன் பிறகே சட்டப்படிப்பு படிக்க வேண்டும். ஆனால் இந்த கல்வி விதிகளை அவர் பின்பற்றவில்லை. எனவே அவர் வக்கீலாக தொழிலாற்ற முடியாது.
என்றாலும், அவர் படிப்பு வெறும் காகிதமாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. அவருக்கு தனியார் நிறுவனங்கள் வேலை வழங்குவதில் கோர்ட்டு குறுக்கே நிற்காது. ஆனால் வக்கீல் தொழிலாற்றும் உரிமையை அவர் கோர முடியாது. பல்கலைக்கழகத்தின் நோட்டீசும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.