'குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வு செய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான, குரூப் - 2 ஏ பிரிவில்
அடங்கிய, நேர்முகத் தேர்வு அல்லாத, உதவியாளர், நேர்முக உதவியாளர்
பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. அந்த, 2,508
காலிப் பணியிடங்களுக்கான, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, கடந்த மாதம் 29ம் தேதி முதல் நடந்து
வருகிறது. ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு முடிந்த பின், மீதமுள்ள காலிப்
பணியிடங்கள் எண்ணிக்கை, இனம், துறை வாரியாக தேர்வாணைய இணையதளத்தில், அன்றே
வெளியிடப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள், இனவாரியான மீதமுள்ள
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை, ஆய்வு செய்ய வேண்டும். அவரவர் பிரிவில்,
காலியிடங்கள் இருந்தால் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நாளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டு உள்ளது.