பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்டம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 5 அல்லது 6ம் தேதிகளில்  செய்முறை தேர்வுகளை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.


சென்னையில் மொத்தம் உள்ள 406 மேல்நிலை பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் 50 ஆயிரம் மாணவ&மாணவியர் செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக சென்னையில் 300 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. செய்முறை தேர்வில் 30 மதிப்பெண்கள் புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு தரப்பட்டுள்ளன. இரண்டிலும் சேர்த்து 40 மதிப்பெண்கள் எடுத்தால்தான் செய்முறை தேர்வில் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற முடியும். அதாவது செய்முறை தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெறவில்லை என்றால் தேர்ச்சிபெற முடியாது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த ஆண்டு 35 ஆயிரம் மாணவ மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.  பிப்ரவரி 28ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடித்து அதில் மாணவர்கள் பெற்ற அகமதிப்பெண்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்  தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர். அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் 54 ஆயிரம் மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாவட்ட மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.