சென்னையில் பிப்ரவரி 13,14-இல் கல்வி மாநாடு.

சென்னையில் பிப்ரவரி 13, 14 தேதிகளில் கல்வி தொடர்பான தேசிய மாநாடு நடைபெற உள்ளது. டான் பாஸ்கோ சீர்மிகு பள்ளி சார்பில் மாற்றத்தை விரும்பும் கல்வியாளர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 
             தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல், எதிர்காலத்துக்கான பாடத்திட்டம், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவை தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில், பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என டான் பாஸ்கோ பள்ளியின் தாளாளர் ஜான் அலெக்ஸôண்டர் கூறினார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், சி.பி.எஸ்.இ. அமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் வி.குன்னுக்கல், வி.ஐ.டி. பல்கலைக்கழ வேந்தர் ஜி.விஸ்வநாதன், மணிபால் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராம்நாராயண், புதுதில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் ஜெயதி கோஷ் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.