இந்திய விடுதலையைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட
தன்னிகரில்லாத புரட்சி வீரர் சுபாஷ் சந்திரபோஸ் (Subhas Chandra Bose)
பிறந்த தினம் இன்று (ஜனவரி 23). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் பாரம்பரியப் பெருமை கொண்ட குடும்பத்தில்
பிறந்தவர். பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். கொல்கத்தா
ரேவன்ஷா கல்லூரியில் உயர் கல்வி கற்றார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி
குருவைத் தேடி அலைந்தார். குரு கிடைக்காததால் தந்தை சொன்னபடி 1915-ல்
கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கே இனவெறி பிடித்த ஆசிரியருடன் நடைபெற்ற மோதல் காரணமாக சுபாஷும் அவரது
நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்தக்
கல்லூரியிலும் சேர முடியாதவாறு தடையும் விதிக்கப்பட்டது. சி.ஆர். தாஸ்
உதவியுடன் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர்களுக்குரிய
படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
ஐ.சி.எஸ். பட்டம் பெற்றார். ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும்
ஆங்கிலேயனிடம் வேலை பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை
லண்டனிலேயே துறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தன்
விருப்பம் குறித்து சி.ஆர். தாஸுக்குக் கடிதம் எழுதினார்.
அவரை வரவேற்று பதில் கடிதம் அனுப்பினார் சி.ஆர். தாஸ். இவரது திறனை நன்கு
புரிந்துகொண்டிருந்த தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக
வெறும் 25 வயதே ஆன சுபாஷை நியமித்தார். மாணவர்களிடையே விடுதலை உணர்ச்சி
பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றிவந்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தலைமையேற்று நடத்திய டயரைச் சுட்டுக் கொன்ற
உத்தம் சிங்கைக் கண்டித்து காந்திஜி அறிக்கை விட்டார். ஆனால், சுபாஷ்
அவரைப் பாராட்டிக் கடிதம் அனுப்பினார். காந்திஜிக்கும் இவருக்கும் மோதல்
ஆரம்பமானது.
மாநகராட்சி நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ், கொல்கத்தா
நகரில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவருக்கு ஆதரவு பெருகி வருவதைக்
கண்ட பிரிட்டிஷ் அரசு ஏதோ காரணம் காட்டி இவரைக் கைது செய்து சிறையில்
அடைத்தது.
சிறையில் இருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
சிறையிலிருந்து வெளிவந்து உடல்நிலை தேறிய பின் 1930-ல் ஐரோப்பிய
நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று இந்திய விடுதலைக்காக ஆதரவு
திரட்டினார்.
1941-ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற
ரேடியோ மையத்தையும் நிறுவி, நாட்டுக்கெனத் தனிக் கொடியை அமைத்து, ஜன கணமன
பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி,
பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று
பெயரிட்டார்.
இந்திய புரட்சி நாயகரும் இந்தியாவின் தன்னிகரற்ற சுதந்தரப் போராட்ட
வீரருமான இவர் 1945 ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் 48-ஆவது
வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், இவருடைய மரணம்
குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.