தணிக்கைக்கு பணம் வசூல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு - DINAMALAR

திண்டுக்கல் : வருங்கால வைப்பு நிதியை தணிக்கை செய்ய பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த கணக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படுகிறது. 1996-97 க்கு பின் தணிக்கை செய்யப்படவில்லை. இதனால் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மட்டும் வருங்கால வைப்பு நிதி கணக்கிடப்பட்டு 10 சதவீதம் பிடித்தம் போக மீதி வழங்கப்படுகிறது. இந்த குளறுபடியை நிவர்த்திசெய்ய ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியை, பொது வருங்கால வைப்பு நிதியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களிடம் 2014 மார்ச் 31 வரை பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கணக்கிட்டு தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் இதுவரை தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் டிச., 26 க்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு "மெமோ' கொடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் வருங்கால வைப்பு நிதி கணக்கை சரிசெய்யும் பணியில் உதவிதொடக்கக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கணக்கை தணிக்கை செய்ய ஒவ்வொரு ஆசிரியரிடமும் ரூ.250 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒருசில ஒன்றியங்களை தவிர மற்ற ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தணிக்கையை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அமல்ராஜ் கூறியதாவது: "தணிக்கை செய்ய தணிக்கையாளர்கள் பணம் கேட்பதாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர் கூறுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து தலைமை பொது தணிக்கை அலுவலருக்கு புகார் அனுப்ப உள்ளோம், என்றார்.