"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்'

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

             ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே, தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளதாகத் தெரிகிறது.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிப்பதுடன், உடனடியாக ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.