இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநில அரசிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, பதிலளிக்கும்படி பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், திருச்சியில் உள்ள கமலா நிகேதன் மாண்டி சோரி பள்ளி (சி.பி.எஸ்.இ.) நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சட்டத்திருத்தம்

தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளி கல்வித்துறை சில திருத்தங்களை செய்து 18-9-2014 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தமிழக பள்ளி கல்வித்துறையிடம் அங்கீகாரம் பெறவேண்டும்.

இந்த அங்கீகாரத்தை எங்கள் பள்ளி நிர்வாகம் பெறாததால், எங்கள் பள்ளிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று கேள்வி கேட்டு எங்களுக்கு திருச்சி முதன்மை கல்வி அதிகாரி விளக்க நோட்டீசு அனுப்பியுள்ளார்.

சட்டவிரோதம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், மத்தியஅரசு வகுத்துள்ள பாடத்திட்டங்களை பின்பற்றும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்டார். இதையடுத்து, மனுவுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், திருச்சி முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் 8 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.