மாணவர்கள் முன்பு ஆசிரியர்கள் அடிதடி இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பண்ணைவிளை டக்கர் மேல்நிலைப்பள்ளியில், ஆண்- பெண் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏரல் அருகேயுள்ள பண்ணைவிளையில் டக்கர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு விக்டர் ஐசக் மனைவி, மாசில்லா,50, உதவி தலைமையாசிரியராக உள்ளார். இதே பள்ளியில் தூத்துக்குடி சுந்தர் நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ், 48, ஆசிரியராக பணியயாற்றி வருகிறார்.
ஆண்ட்ரூஸ் குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். மாணவர்களுக்கு பாடங்களை சரியாக கற்பிப்பதில்லை, என புகார் தரப்பட்டது. இது குறித்து உதவி தலைமையாசிரியை மாசில்லா ஆண்ட்ரூஸை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இரு ஆசிரியர்களும் ஏரல் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.