ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து வகுப்புக்கு செல்ல வேண்டும்: த.சபீதா

ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உதவி கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவித்தார்.

அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழ்நாட்டில் உள்ள உதவி கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாக பயிற்சி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதல் கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உதவி கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் உதவி கல்வி அதிகாரிகளுக்கான கையேட்டை வெளியிட்டுபேசியதாவது:-

மாணவர்கள் 8-வது வகுப்பு வரை ஒழுக்கமாக இருந்தால் தான் அவர்கள் உயர்கல்வி படிக்கும்போதும், பின்னர் வாழ்க்கையிலும் ஒழுக்கமாக வாழ்வார்கள். எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியவர்கள் மாணவர்கள்தான். அவர் களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களை தமது குழந்தைகளாக பாவிக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

முதன்மை செயலாளர் த.சபீதா

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசியதாவது:-

பள்ளிகளின் தரம் உயர வேண்டும், கல்வித்தரம் உயரவேண்டும் ஆகிய இரண்டையும் குறிக்கோள்களாக முதல்-அமைச்சர் கொண்டுள்ளார். கல்வித்துறையில் தமிழகம் சர்வதேச அளவில் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்று நினைத்து, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு தடை ஏற்படக்கூடாது என்று எண்ணி, பாடப்புத்தகம் முதல் மடிக்கணினி வரை 14 வகையான விலை இல்லா பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். அதன்படி அந்த 14 வகையான பொருட்களும் விலை இல்லாமல் பள்ளிக்கூடம் திறக்கும் நாள் அன்றே வழங்கப்படுகிறது. அதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உள் கட்டமைப்பு வசதி

பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிக்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உதவி கல்வி அதிகாரிகளுக்கு பொறுப்பு நிறைய உள்ளது. நீங்கள் பொறுப்பாக உங்கள் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும். அதனால் மற்ற ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவார்கள்.

அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து அரசின் விலை இல்லா திட்டங்கள் போய்ச்சேர்ந்துள்ளதா? என்று சோதனை செய்ய வேண்டும். மாணவர்கள் எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களை கல்வி கற்பிக்கவைக்க வேண்டும். பலவீனமான மாணவர்களுக்கு அந்த பாடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். 100 சதவீத தேர்ச்சியை மாணவர்கள் அனைவரும் அடைய ஆசிரியர்கள் வழிசெய்ய வேண்டும். அதை உதவி கல்வி அதிகாரிகள் கண்காணித்து ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில கல்வி வாரியம் அல்லாத சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வாரிய பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணியமான முறையில் உடை

ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதாது, கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புகளுக்குச் செல்லவேண்டும். அவர்களை பார்த்துதான் மாணவர்கள் நடப்பார்கள். அதனால் ஆசிரியர்கள் எப்படி கண்ணியமாக நடக்க வேண்டுமோ அப்படி நடக்க வேண்டும். அத்தகைய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
இவ்வாறு த.சபீதா பேசினார்.


பூஜா குல்கர்னி

முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உள்பட பலர் பேசினார்கள்.

இணை இயக்குனர்கள் கருப்பசாமி, தர்ம.ராஜேந்திரன், கார்மேகம், பழனிச்சாமி, லதா, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார்.